மறுமணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
திருமணம் என்பது வாழ்க்கை எனும் புத்தகத்தின் முக்கிய அத்தியாயமாகும்.
பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக சிலருக்கு திருமண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது .
தன்னுடைய இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் குழந்தைகளின் வருங்காலத்தை கருத்தில் கொண்டும் பலர் மறுமணம் செய்து கொள்கிறார்கள் :
புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால் மறுமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்கள் அதிக சிக்கல்களை சந்திப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.
இவற்றைத் தவிர்ப்பதற்கு மறுமணம் செய்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது அதைப் பற்றிய தகவல்கள்:
இங்கே இரண்டாவது துணையின் குழந்தைகள் மறுமணம் என்பது இருவரை மட்டுமே சார்ந்தது அல்ல.
முதல் திருமணத்தின் மூலம் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ குழந்தைகள் இருந்தால் அவர்களையும் இரண்டாவது பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும் .
புதிதாக வரும் துணைக்கு அந்த குழந்தையை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கலாம்.
அதே போல் குழந்தை தன்னுடைய பழைய பெற்றோரை மீண்டும் சந்திக்கும் போது சில பிரச்சினைகள் ஏற்படலாம் .
இவ்வாறு பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
பல குடும்பங்களில் விவாகரத்து முடிந்து இருவரும் பிரிந்து பிறகு முன்னாள் கணவர் தங்கள் குழந்தைகளை பார்க்க மனைவி அனுமதிப்பது இல்லை இதனால் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப்படும் .
புதிய பெற்றோரை ஏற்றுக் கொள்வதில் குழந்தைகளுக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கும்.
இதற்கு ஆரம்பத்திலேயே தீர்வு காணாவிட்டால் இரண்டாம் திருமணத்தில் சிக்கல்கள் வரக்கூடும்.
எனவே இந்த விஷயத்தில் முதலிலேயே தெளிவான முடிவை எடுப்பது அவசியமாகும் .
பொருளாதார பிரச்சினைகள்
திருமண வாழ்க்கையில் குடும்பத்தில் உண்டாகும் செலவுகளை பெரும்பாலும் கணவன், மனைவி இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.
தவணை முறையில் பொருட்கள் வாங்குவது, முதலீடு செய்வது போன்றவற்றை இருவரும் இணைந்து செய்வார்கள் .
விவாகரத்து ஏற்படும் போது இது போன்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளில் பல பெண்கள் சிரமப்படுகிறார்கள்.
முதல் திருமண பந்தத்தில் இருந்து விலக நினைக்கும் போது இருவருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி பேசி சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் மறுமண வாழ்க்கையில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பிக்கும்.
தவறுகளை திருத்திக் கொள்ளுதல்
திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு கணவன், மனைவி இருவரின் பக்கமும் சில காரணங்கள் இருக்கும் .
மறுமணம் செய்வதற்கு முன்பு முதல் திருமணம் எதனால் தோல்வி அடைந்தது எனும் காரணத்தை நேர்மையாக அலசி ஆராய வேண்டும்.
அந்த திருமண வாழ்க்கையில் தங்கள் செய்த தவறுகள் மறுமண வாழ்க்கையில் மீண்டும் நடக்காதவாறு கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உளவியல் சார்ந்த பிரச்சினைகள்
மறுமண வாழ்க்கையில் சந்தேக மனப்பான்மை, சுயநலம், சுதந்திரம் இல்லாத உணர்வு, தேவையற்ற பயம் என பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சனைகளை பெண்கள் எதிர் கொள்கிறார்கள்.
இதனால் பல விஷயங்களில் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
மறுமண வாழ்க்கையில் தனது வாழ்க்கைத் துணைக்கு அவருடைய முன்னாள் துணையுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் உணர்வு இருவரின் வாழ்க்கையையும் மனரீதியாக பாதிக்கும். எனவே முதலில் வெளிப்படையாக இதைப் பற்றி கேட்டு தெளிவடைந்த பின்பு மறுமண பந்தத்தில் இணைவது நல்லது.