பெண்களின் பாடு....


பொது இடங்களில் தன் மனைவியையோ தன் சகோதரியையோ தன் தாயையோ ஒருவன் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது கோபம் வருகிறது.

அதே பொது இடங்களில் அடுத்தவன் மனைவியையோ அடுத்தவன் சகோதரியையோ அடுத்தவன் தாயையோ தான் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது  ஆனந்தம் வருகிறது.

இந்த முரண் தான் பெண்கள்  நிம்மதியாய் வாழத் தகுதியற்ற ஓர் சமூகத்தை கட்டமைத்திருக்கிறது.

பள்ளி மாணவர்களின் கையிருக்கும் செல்போன்களைக் கூட ஆபாசப் படங்கள் ஆக்கிரமித்து விட்டன. பாலியல் குறித்த கல்வி இல்லாமல் போனதன் விளைவு இது.

வீடுகள் கடைவீதிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக்குகளில் குடித்து விட்டு திரியும் குடிகார ஆண்களை நம் குடும்பத்து பெண்கள் பெரும் சகிப்போடு கடக்கிறார்கள்.

பேருந்துகளில் பெண்கள் படும் பாடு பெரும்பாடு, வக்கிர உரசல்களில் இருந்து தன்னை பாதுகாக்க பெரும் போராட்டம் நடத்துகிறார்கள்.
பொது இடங்களில் அவள் அங்கங்களை படம்பிடிக்க கண்ணுக்கு தெரியாத ஆயிரம் செல்போன்கள் காத்துக் கிடக்கின்றன.

பள்ளிக்கு போனால் ஆசிரியரின் பாலியல் தொந்தரவு, வேலைக்கு போனால் உயர் அதிகாரிகளின் இரட்டை அர்த்தப் பேச்சு. 

பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் பலர் அவள் உடலை பதிலுதவியாய் எதிர்பார்க்கிறார்கள்.
கணவனை இழந்த பெண் மீது எளிதில் காமக் கணைகளை வீசி விடுகிறார்கள். 

பெண்களின் அத்தியாவசிய மருத்துவப் பொருளான நாப்பின்களை கடைக்காரர் பேப்பரிலோ பாலித்தீன் கவரிலோ மறைத்துத் தர வேண்டிய பொருளாய் ஆக்கி விட்டோம், மது மற்றும் பான் மசாலாக்களை வெளிப்படையாய் வாங்குகிறோம்.

கருத்தடை சாதனங்களை பயன்படுத்திவிட்டு சகஜமாய் குப்பையில் வீசுகிறோம் ...அவறைக் கூட விளையாட்டு பொருளா என்று கேட்கும் பிஞ்சுகளின் மனதில் நஞ்ஞை அறியாமல் விதைகிறோம்.

மாதவிடாய் பற்றி சகஜமாய் பேசிவிட்டால் பெண்ணாய் சற்று மட்டமாய் பார்கிறோம்..
இதை எல்லாம் வெளிப்படையாய் பேசினாலோ பெண்ணியவாதி என முத்திரை குத்திவிடுகிறோம்

பெண் என்பவள் நுகர்வுப் பொருளோ - காட்சிப் பொருளோ - இன்பம் தரும் இயந்திரமோ அல்ல.

உன்னைப் போல அவளும் ஓர் உயிர்.
சகோதரியாய் தான் பார்க்க வேண்டும் என்ற சொல்லவில்லை சக மனுசியாக பார் என்று தான் கேட்கிறேன்....

பெண்ணியம் பேசவில்லை பெண்களுக்காக பேசுகிறேன்.......

கருத்துரையிடுக

புதியது பழையவை