கவர்ச்சியான கண்களுக்கு காஜல்
முகம் அழகாகவும், பளபளப்பாகவும் தெரிய வேண்டுமென்று பலர் பலவிதமான கிரீம்களை தினசரி பயன்படுத்துவது உண்டு.
அதுபோல கண்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதற்கு பலவித முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அதில் சந்தைகளில் விற்கப்படும் காஜலை பயன்படுத்தும் பெண்கள் ஏராளம்.
சில சமயங்களில் சந்தையில் விற்கப்படும் காஜல் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
கண் எரிச்சல் , அரிப்பு, கண்களில் நீர் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை தரலாம்.
இதனை தவிர்க்க வீட்டிலேயே காஜலை தயார் செய்து பயன்படுத்தினால் எந்த பாதிப்பும், அச்சமும் ஏற்படாது.
எனவே வீட்டிலே காஜல் தயாரிப்பது எப்படி என பார்ப்போம்.
இயற்கையான முறையில் வீட்டிலேயே காஜலை தயாரிக்க முடியும்.
நமது முன்னோர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை வைத்து தான் கண்ணுக்கு மை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர் .
முதலில் காய்ந்த நெல்லிக்காய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் பாதாம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் .
காஜலின் கருப்பு நிறத்தை உருவாக்க இரண்டு கிண்ணங்களை எடுத்து சிறிது இடைவெளியுடன் தரையில் குப்புற வைக்க வேண்டும் .
இப்போது கிண்ணங்களை இணைக்கும் படி அவற்றின் மேல் ஒரு தட்டை வைத்து அதற்கு கீழே விளக்கு ஒன்றை எரிய வைக்க வேண்டும்.
விளக்கின் நெருப்பானது தட்டை தொடுமாறு இருக்க வேண்டும்.
இந்த நிலையிலையே சுமார் 20 நிமிடங்கள் வைத்து மெதுவாக தட்டை எடுத்தால் அதில் கருப்பு நிற தூள் படிந்து இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
அந்த தூளை ஒரு பாத்திரத்தில் முழுமையாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் .
அதன் பின் காய்ந்த நெல்லிக்காய், பாதாம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து இந்த பொடி உடன் சிறிது ஆமணக்கு எண்ணையை சேர்க்க வேண்டும்.
ஏற்கனவே சேமித்து வைத்திருந்த கருப்பு தூளுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட தூளையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதனை ஒரு குப்பியில் வைத்து வெகு நாட்களுக்கு பயன்படுத்தலாம் .
இதில் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நெய் கூட பயன்படுத்தலாம் .
மேலும் பாதாமிலும் சற்று நெருப்பில் காட்டி பொடியாகவும் பயன்படுத்தலாம்.
இந்த காஜலை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இந்த காஜலை தினமும் பயன்படுத்துவதால் கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.