மாற்றம் காண்போம், ஆண் பிள்ளைகளுக்காகவும்.
பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பேசப்படும் அதேவேளை நாம் நம் வீட்டு ஆண் பிள்ளைகள் பற்றி பேச வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
இன்றைய நவீன யுகம் இளைஞர் இளைஞருக்கு பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியதோடு பல ஆபத்துகளையும் கூடவே தந்துள்ளது எனலாம் .
போதை என்பது முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிந்த செய்தியாகவே இருந்தது.
எனினும் அண்மைக்காலமாக அது பல்வேறு உருவங்களில் இளையோர் மத்தியில் பரப்பப்பட்டு வருவது மிக ஆபத்தான எதிர்காலத்தை தோற்றுவிக்க கூடிய அச்சத்தை பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
சில பெற்றோருக்கு எப்படி நடக்கிறது என்பதாக ஆராய்கின்றனர்.
எனினும் ஆபத்தை கையில் கொடுத்துவிட்டு அதை தேடி அலைவது பெற்றோருக்கு வழக்கமாகிவிட்டது.
கைபேசியை கையில் கொடுத்துவிட்டு பிள்ளையின் கண் கெட்டுவிடும் என எண்ணுபவர்கள் அந்த கைபேசியால் அவர்களது வாழ்க்கை கெட்டு விடக்கூடும்.
ஆபத்து என்றால் என்ன செய்வது என்பது பற்றி கேள்விக்குறிதான்.
ஆரம்ப காலங்களில் மிதமாக காணப்பட்ட கைப்பேசி ஆபத்துகள் பாடசாலை கல்வி செயல்பாடுகள் இணைய வழிக்கு மாறிய பின்னர் மிக தீவிரமாக அதிகரித்து உள்ளது.
தவறான செயல்பாடுகள், தவறான தொடர்புகள், வயதுக்கு மீறிய நட்புகள், விழுந்து இறந்து போன இரு மாணவர்களின் உயிரிழப்புக்கான உண்மை இதுவரையில் பேசும் பொருளாகவே உள்ளது.
உண்மையில் இவ்வாறான இறப்புகள் தவறுகளால் தடுமாறும் சமூகம் முன்பு இருக்கவில்லை.
காரணம் வீடுகளில் உறவுகள் கூடி வாழ்ந்தனர் .
சிறு விஷயம் என்றாலும் பலரும் கலந்து முடிவு செய்தனர்.
தவறுகளை கண்டித்து திருத்தினர்.
தற்போது இவ்வாறான செயல்பாடுகளுக்கு சந்தர்ப்பமே இல்லை .
பணம் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து அவர்களின் வாழ்க்கையின் பாதையை சீர் செய்ய நினைத்து தவறிழைப்பதும்,
வசதியற்ற குடும்ப பிள்ளை பெற்றோர் கேட்டதை வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் தவறான முடிவுக்கு செல்வதும் வழக்கமாகிவிட்டது.
ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த வயதில் என்ன தேவை என்பதை முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
கல்வியின் அவசியமும் , அதனை பெறுவதால் தங்கள் எதிர்காலத்தில் பெறக்கூடிய உயர்வு பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு கைப்பேசி அவசியம் என்றால் அதன் எல்லை எது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
அவர்கள் நட்பு வட்டங்களை பற்றி அவ்வப்போது விசாரியுங்கள்.
அந்த நட்புக்குள் நீங்களும் சற்று தலை காட்டுங்கள் .
பிள்ளையின் வயதுக்கு மீறிய நட்புக்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் அறிவுறுத்துவது போல தினமும் பிள்ளைகளின் பாடசாலை பைகளை பரிசோதிங்கள்.
அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணியுங்கள் .
அவர்களுடைய பெற்றோர் என்ற எல்லைக்குள் இருந்து விடாது ஒரு நட்புடன் அணுக முயலுங்கள் .
நிச்சயம் வாழ்க்கை மாறும்..