குழந்தை பிறந்த பிறகும் தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கலாம்
கணவன், மனைவி இருவரது உலகில் புதிதாக ஒரு உயிர் இணைவது அளவில்லாமல் மகிழ்ச்சியை தரும்.
குழந்தையின் வரவால் அவர்களுக்கு வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
வாழ்க்கை முறையில் மட்டுமின்றி எண்ணங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றிலும் நேர்மறை மற்றும் சில எதிர்மறை மாற்றங்கள் உண்டாகும்.
இவற்றை சரியான முறையில் கையாளும்போது தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.
அதற்கான வழிகள் சில:
இடைவெளியை தவிருங்கள்
குழந்தையை கவனிப்பதிலேயே பெரும்பாலும் ஆன நேரத்தில் செலவிடுவதால் இருவருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையக்கூடும்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே உணர்வுபூர்வமான புரிதல் குறைகிறது.
நாளடைவில் இடைவெளி ஏற்படலாம்.
இதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.
நேர்மறையான அணுகுமுறை, பொறுமை, நகைச்சுவை உணர்வை பகிர்தல் போன்ற விஷயங்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும்.
இதனால் மன இறுக்கம் குறையும்.
குழந்தையை சிறிது நேரம் கவனித்துக் கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடலாம்.
தாம்பத்தியம் ஆரோக்கியமான உறவின் அடிப்படை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணர்வுகளை பகிருங்கள்
ஆரோக்கியமான தம்பதியத்தில் தாம்பத்தியத்தின் அடிப்படை ஒழிவு மறைவு இல்லாத உரையாடல் தான்.
புதிதாக பிரசவித்த தாய்மார்களுக்கு மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இது உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதற்கான தீர்வை உடனடியாக தேட வேண்டும் .
நேரத்தை ஒதுக்கி இருவரும் தங்களுக்குள் இருக்கும் உணர்வை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
ஒருவரின் பிரச்சனையை மற்றொருவர் பொறுமையாக கேட்க வேண்டும்.
தேவையற்ற கிண்டல், மற்றவர் மீது பழி சுமத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
குழந்தை பிறந்த பின்பு சில பெண்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுவது இயற்கை தான்.
வாழ்க்கை துணை போதுமான ஆதரவு கொடுக்கும் போது மனநலத்தில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
வேலையை பகிருங்கள்
குழந்தையை கவனிப்பதில் பெரும்பாலமான நேரத்தை செலவிடுவதால் உங்கள் துணையின் வழக்கமான பணிகள் பாதிப்படையலாம்.
இதுவே தம்பதிக்குள் ஒருவித இறுக்கத்தை உருவாக்கும்.
எனவே கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, வெளி வேலைகள் என அனைத்தையும் பகிர்ந்து செய்ய வேண்டும்.
இதனால் வேலை சுமை குறைவதுடன் பணிகளும் எளிதில் முடியும்.
தாய் மீதான அக்கறை
குழந்தை பிறந்த பின்பு தாயின் தூக்க நேரம் குறையலாம்.
சரிவர தூக்கமில்லாததால் அவருக்கு வெறுப்புணர்வு, உடல் நல குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே வீட்டில் இருக்கும்போது குழந்தையை கணவர் கவனித்துக் கொண்டு மனைவி தூங்குவதற்கு போதுமான நேரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.