அந்த வியாபாரி கடின உழைப்பாளி மட்டுமல்ல மிகுந்த புத்திசாலியும்கூட.
சென்ற பத்து ஆண்டுகளில் தன் சளைக்காத உழைப்பால் பல ஊர்களில் தொழில் நிறுவனங்கள் துவங்கியதோடு அவற்றை முறையாக நிர்வாகம் செய்து நெறிப்படுத்தி தன் முழு கட்டுப்பாட்டிலும் ஆளுமையின் கீழும் வைத்திருந்தார்.
தொழில் மற்றும் வியாபாரம் என்றால் அதற்கு முன்மாதிரி இவர்தான் என்று அனைவரும் மெச்சும்படியான மனிதராக விளங்கினார்.
ஒருநாள் தன் கணக்கரை அழைத்த வியாபாரி, "இப்போதுள்ள என் ஒட்டுமொத்த சொத்து விபரங்கள் என்ன..? இந்த நிமிடம் நான் என் தொழில் மற்றும் வியாபாரங்களை நிறுத்திவிட்டால் இன்னும் எவ்வலவுகாலம் நிம்மதியாக இதே சுகபோக வாழ்க்கைமுறை வாழலாம்..?" என்று கேட்டார்.
"பார்த்துவிட்டு சொல்கிறேன் ஐயா" என்று சொல்லிச்சென்ற கணக்கர், இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த வரவு-செலவுகளையும் கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு வந்து சொன்னார், "ஐயா, இதுவரையிலான உங்கள் முதலீடுகள் நல்ல வருமானத்தை ஈட்டுகிறது. இப்போது நீங்கள் ரிட்டைர் ஆனாலும்கூட இன்னும் இரண்டு தலைமுறைக்கு எந்த கவலையும் இல்லாமல் சொகுசாக வாழலாம்" என்று.
"என்ன..? வெறும் இரண்டு தலைமுறைதானா..? அப்படியென்றால் என் மூன்றாம் நான்காம் தலைமுறை கதி என்னவாகும்..?" இந்த எண்ணம் கவலையாக மாறி வியாபாரியின் மனதை சதா அரிக்கத்துவங்கியது.
சரியாக உண்பதில்லை, சரியாக உறங்குவதில்லை... எப்போதும் தன் மூன்றாம் நான்காம் தலைமுறை நிலைமை என்னவாகும் என்றே வருந்தத்துவங்கினார். இதனால் அவரின் உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது.
எவ்வளவோ போராடி, எவ்வளவோ இன்னல்களை சந்தித்து, எவ்வளவோ திட்டமிட்டு, இவ்வளவெல்லாம் உழைத்தும் தன் மூன்றாம் நான்காம் தலைமுறையின் நல்வாழ்வை உறுதிசெய்ய முடியவில்லையே..?
இப்படியே அவர் தன்னைத்தானே வருத்திக் கொண்டிருக்கையில் அவருடைய பால்ய நண்பரொருவர் வியாபாரியை சந்திக்க வந்திருந்தார். நண்பருடைய அகத்தின் கவலைகள் முகத்தில் பிரதிபலிப்பதை கண்ட நண்பர், "என்னடா பிரச்சினை..? தொழிலா, குடும்பமா..?" என்று அன்போடும் அக்கறையோடும் விசாரித்தார்.
வியாபாரி தன் கவலையை சொன்னதும் நண்பருக்கு பிரச்சினையின் ஊற்றுக்கண் புரிந்தது. வெறும் வார்த்தைகளால் அறிவுரை சொல்வது நண்பனுக்கு உதவவாது என்றறிந்து...
நம்ம ஊருக்கு பக்கத்து ஊரில் ஒரு அறிஞர் இருக்கிறார். நாளை காலையில் அவரை சந்திக்கச் செல். போகும்போது மறக்காமல் அவருக்கு உணவு எடுத்துச்செல், உன் கவலையை தீர்க்கும் வழியை அவர் சொல்வார்" என்றார்.
மறுநாள் காலை நண்பர் சொன்னபடி தட்டு நிறைய உயர்தர உணவு வகைகள் எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் அறிஞரை பார்க்கச் சென்றார் வியாபாரி.
அறிஞருக்கு வணக்கம் கூறி தான் கொண்டுவந்திருந்த உணவுத்தட்டை அவரிடம் கொடுத்தார். நன்றி கூறி அதை பெற்றுக்கொண்ட அறிஞர், "தம்பிகளா... இந்த பெரிய மனிதர் நமக்காக சுவைமிக்க உணவு கொண்டுவந்திருக்கிறார் வாருங்கள்" என்று தன் மாணவர்களை அழைத்தார்.
ஓடோடி வந்த ஒரு மாணவர், "ஐயா, சற்று முன்புதான் ஒருவர் நமக்கான இன்றைய உணவை அளித்துச்சென்றார்" என்று கூறினார்.
"அடடா... அப்படியா விசயம்" என்று புன்முறுவலோடு கேட்ட அறிஞர் நம் வியாபாரியை பார்த்து, "*உங்கள் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்கள் இன்றைக்கான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே உங்கள் அறுசுவை உணவை ஏற்க இயலா நிலையில் இருக்கிறேன், மன்னிக்கவும்*" என்றார்.
"அதனால என்னங்க... இந்த உணவை நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள்" என்று பணிவோடு சொன்னார் வியாபாரி.
அறிஞர் சிரித்தபடியே "நாங்கள் உணவை பதுக்கி வைப்பதில்லை சகோதரரே, இன்றிருப்பதை இன்றே அனைவரும் உண்டு பிறருக்கும் பகிர்ந்தளித்து வாழ்கிறோம்" என்றார்.
சேமித்து வைப்பது எப்படி பதுக்கி வைப்பதாகும், புரியவில்லை வியாபாரிக்கு. "ஒருவேளை நாளைக்கு உங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால்...?" கொஞ்சம் கவலையோடும் அக்கறையோடும் கேட்டார் வியாபாரி.
"*சகோதரரே நம் கவலைகளின் தோற்றுவாயே இதுதான். நாளை இன்னும் பிறக்கவே இல்லை, நம் கற்பனையில்தான் அது இப்போது வாழ்கிறது. ஆனால் நாமே கற்பனையில் ஒரு பிரச்சினையை உருவாக்கி அதன் பாதிப்புகளை கண்டு அஞ்சி, இன்றைய இப்பொழுதை வாழாமல் கவலையில் கழிக்கிறோம். இந்த பொழுதை இழந்தவருக்கு அடுத்த பொழுது மட்டும் எப்படி கைகொடுக்கும்*..?"
"*நம்முடைய இன்று, நேற்றின் தொடர்ச்சி, அது போல் நாளையும் இன்றின் தொடர்ச்சி.
இன்றைய பொழுதை நிறைவாக, முழுமையாக வாழாவிட்டால் இதன்தொடர்ச்சி நல்லபடி அமையுமா..? நாளை பற்றியகவலையோடு இன்றைய பொழுதை நீ முடித்தால், இதன் தொடர்ச்சியான கவலையோடுதானே உன் நாளையும் துவங்கும்...!"திட்டமிடுங்கள், உழையுங்கள் ஆனால் கவலைகொள்ளாதீர்கள். திட்டம் என்பது தொடர்ந்து உள் மற்றும் புறச்சூழல்களின் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். "*மாற்றம் ஒன்றே மாறாதது*" என்ற பிரபஞ்ச தத்துவத்தின் பகுதியது. ஆனால்... இப்படியாகிடுமோ அப்படியாகிவிடுமோ என்ற உங்கள் கவலை மட்டும் மாறாமல் தொடர்கிறது. இது பிரபஞ்ச விதிகளுக்கே எதிரானது இல்லையா..?இன்றைய பொழுதை உங்கள் உழைப்பால் வளமாக்கி, நீங்களும் சிறப்பாக வாழ்ந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் உதவினால் இதன் தொடர்ச்சியான நாளையும் நிச்சயம் அப்படியே அமையும்*" என்றார் அறிஞர்.
சரிங்கய்யா என்று வணக்கம்கூறி விடைபெற்று இந்த பொழுதை முழுமையாக வாழும் இலக்கோடு நிம்மதியாக வீட்டுக்கு கிளம்பினார் வியாபாரி.