இளம் கணவன் மனைவியருக்கிடையே கருத்து வேறுபாடுகளும், இல்லறச் சிக்கல்களும் தோன்றி விட்டால் - அதனை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்தல் மிகவும் கடினம்.
கருத்து வேறுபாடுகள் எதற்காகவெல்லாம் ஏற்படும்?
ஒன்றுமில்லாத சிறு விஷயத்திலும் ஏற்படலாம். பெரிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
விவரம் அறியாத அந்த இளம் கணவனும் மனைவியும் செய்வதறியாது தவிப்பார்கள். பிரச்னைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். “எல்லாம் தானாகவே சரியாகி விடும்” என்று நினைப்பார்கள். ஆனால் சரியாகாது!
யாரிடமாவது சொல்லலாமா என்று எண்ணுவார்கள்.
பெரும்பாலான கணவன்மார்கள் யாரிடமும் போய் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கேட்க மாட்டார்கள். வெகு சிலர் தங்களின் (சற்று விபரமுள்ள) தந்தையிடம் போய் பேசுவார்கள். இன்னும் சிலர் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவார்கள்.
மனைவிமார்கள் தங்கள் தாயிடமோ, சகோதரியிடமோ போய் அடைக்கலம் தேடுவார்கள்.
பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் – அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்னைகள் தீர்வதில்லை!
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கணவன் மனைவியர் எவ்வாறு இல்லறத்தை வழிநடத்துகிறார்கள்?
ஒன்று: ஒருவர் மீது ஒருவர் கோபத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். (emotional outburst)
அல்லது: கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். (resentment)
அல்லது: ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள் (blaming). இது அனுதினமும் தொடர்கிறது.
அல்லது: “மவுனமே” சிறந்தது என்று வாயைப் பொத்திக் கொண்டு (stone walling) “தேமே” என்று வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்று முடிவு கட்டி விடுகின்றார்கள்.
ஆனால் இவை அனைத்துமே தீர்வுகள் அல்ல! இது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை!
***
பிரச்னை சற்று அல்ல, உண்மையிலேயே பெரியது, அல்லது பூதாகாரமானது என்று வைத்துக் கொள்ளுங்கள். சான்றாக - கணவனோ அல்லது மனைவியோ - தங்களின் வாழ்க்கைத் துணை தனக்கு "உண்மையாக" நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது தமக்கு துரோகம் இழைப்பதாக எண்ணுவதற்கு வாய்ப்பிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகி விட்டபிறகு - தங்களின் இல்லற சிக்கல்களை எவ்வாறு அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ள இயலும்?
***
கணவன் மனைவியருக்குள்ளே எற்படுகின்ற பிரச்னைகளுக்கும் பிணக்குகளுக்கும் தீர்வாக - திருக்குர்ஆன் கூறும் வழிகாட்டுதல்களுள் ஒன்று தான் இரு தரப்பிலும் ஆளுக்கொரு நடுவரை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வதாகும்.
4:35
-----
மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
***
இந்த இறை வசனத்தின் வழிகாட்டுதலுக்கு எவ்வாறு செயல் வடிவம் தருவது? இதனை இப்படிச் சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு முஹல்லா அல்லது ஒரு ஜமாஅத். இதுவே நமது கூட்டமைப்பு. இப்படிப்பட்டஒவ்வொரு முஹல்லாவிலும் - திருமண விவகாரங்களைத் தீர்க்கும் விவரம் அறிந்த நடுவர்களைக் கொண்ட குடும்பநல சீர்திருத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
இப்படிப்பட்ட நடுவர்களுக்கான தகுதி: மார்க்க அறிவு மற்றும் திருமண உளவள ஆலோசனை பற்றிய அறிவு - ஆகிய இரண்டும் தான்!
இப்படிப்பட்ட நிறுவன அமைப்பு ஒன்று - திறம்பட செயல்பட்டால் நம் சமூகத்தில் நிகழ்கின்ற பெரும்பாலான விவாக விலக்குகளை நாம் தவிர்த்திட இயலும்.
இலங்கையைச் சேர்ந்த உஸ்தாத் முஹம்மது மன்சூர் அவர்கள் - செய்தி ஒன்றைச் சொல்கிறார்கள். ஷஹீத் ஷெய்ஃக் அஹ்மத் யாசீன் அவர்கள் பாலஸ்தீனில் சங்கம் ஒன்றை நிறுவினார்களாம். அதன் பெயர் - லஜ்னத்துல் முஸாலஹா - என்பதாகும். சீர்திருத்தச் சங்கம் என்று மொழிபெயர்க்கலாம். குறிப்பாக - கணவன் மனைவையருக்கிடையே ஏற்படுகின்ற இல்லறச் சிக்கல்களைத் தீர்ந்து வைப்பதே இந்தச் சங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். இதன் விளைவாக - பாலஸ்தீனில் - விவாக விலக்குகள் மிகவும் குறைந்து போய் விட்டதாம்.
இன்றைய தேவை இப்படிப்பட்ட குடும்ப நல சீர்திருத்த சங்கங்கள் தாம்.
ஆனால் இன்றைய நமது நிலை என்ன? நம் சமூகத்தின் இன்றைய இளம் கணவன் மனைவியர் பெரும்பாலோருக்கு திருமணம் மற்றும் விவாக விலக்கு சம்பந்தப்பட்ட மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் தெரியவே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.
தலாக்கைத் தவிர்ப்பது என்பது எப்படி என்று தெரியாது! தலாக் விடுவது எப்படி என்றும் தெரியாது! தலாக்குக்குப் பிறகு எப்படி நடந்து கொள்வது எப்படி என்பதும் தெரியாது!
இந்த நிலையில் சமூகத்தை வைத்துக் கொண்டிருக்கும்போது - சமூகம் மேலும் மேலும் பலவீனப்பட்டுக் கொண்டே போவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது!
சமுதாயம் சிந்திக்கட்டும்!
#பலவீனர்களை_பலப்படுத்துதல்
சூரா #அந்நிஸா சிந்தனைகள்